ADDED : ஜூலை 05, 2025 12:50 AM

சென்னை, ஜூலை 5-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அர்ச்சகர்களாக பதவி உயர்வு பெற்ற ஆறு கோவில் பணியாளர்களுக்கு, அதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம், படவேடு ஆகிய இடங்களில், வேளாண் வணிகப்பிரிவு வாயிலாக, 8.68 கோடி ரூபாயில் இரண்டு உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவை உட்பட 103 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 52 வேளாண் கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறைக்கு, 25.1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறையில், பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 208 பேருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை வழங்கினார்.
ஹிந்து அறநிலையத் துறை வாயிலாக, துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 10.5 கோடி ரூபாயில், 52 அறைகளுடன் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதை திறந்து வைத்த முதல்வர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அர்ச்சகர்களாக பதவி உயர்வு பெற்ற ஆறு கோவில் பணியாளர்களுக்கு, அதற்கான அரசாணையை வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.