தொகுப்பூதிய செவிலியர் பணி விவகாரம் ஆய்வு குழுவில் ஓய்வு நீதிபதிகள் நியமனம்
தொகுப்பூதிய செவிலியர் பணி விவகாரம் ஆய்வு குழுவில் ஓய்வு நீதிபதிகள் நியமனம்
ADDED : ஜன 07, 2024 01:53 AM
சென்னை:தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணியை, நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பீடு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகளை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
கடந்த 2015ல், அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில், 10,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில், 4,000 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். மற்றவர்களையும் நிரந்தரம் செய்யக்கோரிய வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரித்தது.
'சுகாதாரத்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து, நிரந்தர, தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஒப்பீடு செய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்' என, 2018ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததால், அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலருக்கு, மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகளின் இயக்குனர் அனுப்பிய கடிதத்தில் இருந்து, 8,262 விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியிருப்பது தெரிகிறது.
பல ஆண்டுகளாக, ஒப்பந்த செவிலியர்கள் போராடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படவில்லை.
எனவே, ஓய்வு நீதிபதிகள் வி.பார்த்திபன், வி.பாரதிதாசன் ஆகியோரை, ஆய்வு குழுவில் நியமிக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், செவிலியர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை, ஆய்வு குழுவிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளிக்க வேண்டும்.
மாவட்ட தலைநகரில், குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மார்ச் 8ல், ஆய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணையை, மார்ச் 8க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.