ADDED : பிப் 27, 2026 06:21 AM

சென்னை: சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் உட்பட, நான்கு சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பயணியர் தேவை அடிப்படையில் அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்கள், அதன் வரவேற்பை தொடர்ந்து, நிரந்தர ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை சென்ட்ரல் - ஷாலிமர், மதுரை - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா, ஹைதராபாத் - கன்னியாகுமரி, கேரளம் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் வலியுறுத்தினார். இதையடுத்து, நான்கு சிறப்பு ரயில்களையும் நிரந்தரமாக தொடர்ந்து இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய இணை அமைச்சர் முருகன் வெளியிட்ட 'எக்ஸ்' பதிவு:
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று, நடவடிக்கை மேற்கொண்டு வரும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

