ADDED : மே 02, 2025 11:06 PM
சென்னை:தமிழகத்தில் அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும். 2023 ஆகஸ்டில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்வதற்கான அனுமதி கேட்கப்பட்டது. அடுத்தாண்டு ஜூனில் தான் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, அகழாய்வை துவக்கிய நிலையில், தமிழகத்தில் மழைக்காலம் வந்தது. இதனால், 2024 டிசம்பர் வரையிலான மழைக்காலத்தில், அகழாய்வு பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன்பின், இந்த ஆண்டு கடந்த நான்கு மாதங்களாகவே, முழு வீச்சில் அகழாய்வு பணிகள் நடந்தன. இந்த மாதத்துடன் அப்பணிகள் முடிய உள்ளன.
அதைத்தொடர்ந்து, புதிய அகழாய்வுகளுக்கு அனுமதி கோர, தமிழக தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதாவது, செப்டம்பரில் அனுமதி கோரினால், மத்திய தொல்லியல் துறையினர் மூன்று மாதங்களுக்குள் அனுமதி அளிப்பர். அதன்பின், அடுத்தாண்டு ஜனவரியில் அகழாய்வை துவக்கி, ஜூலை வரை தொய்வில்லாமல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எங்கெங்கு?
சிவகங்கை மாவட்டம் கீழடி, துாத்துக்குடி மாவட்டம் பட்டணமருதுார், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார், நாகப்பட்டினத்தில் உள்ள புத்தவிகாரம், கடலுார் மாவட்டம் மணிக்கொல்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனுார், கோவை மாவட்டம் வெள்ளளூர், சேலம் மாவட்டம் தெலுங்கனுார் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய, தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.