கட்டுமானம் அடிப்படையில் ஆகம கோவில்களை அடையாளம் காண அர்ச்சகர் சங்கம் வலியுறுத்தல்
கட்டுமானம் அடிப்படையில் ஆகம கோவில்களை அடையாளம் காண அர்ச்சகர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2026 11:48 PM
சென்னை: 'கட்டுமானத்தின் அடிப்படையில், ஆகம கோவில்களை அடையாளம் காண வேண்டும்' என, தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் சங்க இணை செயலர் பால உமாசுதன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களை கண்டறிய, கடந்த 2025 அக்., 6ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆகம கோவில்கள் 7,461 என்றும், ஆகமம் அல்லாத கோவில்கள் 27 ஆயிரத்து 510 என்றும், ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகம கோவில்களை அடையாளம் காண்பதற்கான படிவத்தில், ஆகமங்களின்படி கட்டப்பட்டுள்ளதா என்பதோடு, தினமும் நடக்கும் பூஜைகள், பூஜை செய்பவரின் சான்று, திருவிழாக்கள் நடந்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்த ஆண்டு, எந்த ஆகமத்தின் அடிப்படையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது போன்ற விபரங்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில், ஆகம கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சில இடங்களில், கோவில்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களிடம் விளக்கம் கேட்டு, ஆகம கோவில்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆகமம் அல்லாததாக கூறப்பட்டுள்ள, 27 ஆயிரத்து 510 கோவில்களில் பெரும்பாலானவற்றில், ஆகம முறைப்படியே கும்பாபிஷேகம் நடந்துள்ளது; இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, கட்டுமானத்தை அடிப்படையாக வைத்து, ஆகம கோவில்களை அடையாளம் காண வேண்டும். இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை, 30 நாட்களில் இருந்து, 90 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
