திடக்கழிவு மேலாண்மை வசதி மாநகராட்சிகளில் உள்ளதா? அரசிடம் ஐகோர்ட் கேள்வி!
திடக்கழிவு மேலாண்மை வசதி மாநகராட்சிகளில் உள்ளதா? அரசிடம் ஐகோர்ட் கேள்வி!
ADDED : ஜன 23, 2026 02:51 AM

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் உள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், குப்பை கொட்டுவதற்குத் தடை விதிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திடக்கழிவு மேலாண்மை சட்டப்படி, குப்பையை கையாள தகுந்த வசதிகளை அமைக்க வேண்டும். இந்த வசதிகளை ஏற்படுத்தாததால், திறந்தவெளிகளில் மலை போல குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் அபாயமானது.
எனவே, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளனவா என்பது குறித்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

