வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 445ல் இருந்து 338 ஆக குறைந்தது
வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 445ல் இருந்து 338 ஆக குறைந்தது
ADDED : மார் 30, 2025 05:23 AM
சென்னை : ''தமிழகத்தில் வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள், 445ல் இருந்து, 338 ஆக குறைக்கப்பட்டு உள்ளன,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வகையான சமூக விலக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 1.59 கோடி ரூபாய் அரசு மானியத்துடன், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான மையம், சென்னையில் துவங்கப்பட்டது.
இந்த மையம், விளிம்பில் உள்ள பழங்குடியின மக்கள் குறித்த ஆய்வுகள், ஆவணப்படங்கள் தயாரிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள், 6 சதவீதம் குறைந்துள்ளன. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள், 2021ல், 445ல் இருந்தன; 2024ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இது, 19 சதவீதம் குறைவாகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 421 பேருக்கு வேலை வாய்ப்பு, 649 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஒரு புதிய முயற்சியாக, வன்கொடுமைகள் குறித்த புகார் தெரிவித்தல், வழக்குப் பதிவு செய்ய உதவுதல், சட்ட ஆலோசனை வழங்குவதற்கு, தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மையம் துவங்கப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு, இதுவரை வந்துள்ள, 5,191 மனுக்களில், 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பொதுப்பிரிவினரின் கல்வி அறிவு, 80.09 சதவீதம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு 73.26 சதவீதம் என, உள்ளது.
கல்வி அறிவை உயர்த்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மொத்த நிதி ஒதுக்கீட்டில், கல்வி சார்ந்த திட்டங்களுக்கு மட்டும், 71.31 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலாளர்களாக உள்ள, ஆதிதிராவிட மகளிரை, நில உரிமையாளர்களாக மாற்ற, 'நன்னிலம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 625 பேருக்கு, 30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, மகளிர் நில உடைமையாளராக மாற்றப்பட்டு உள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவும், அரசு உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் கோவி.செழியன், கணேசன், மதிவேந்தன், கயல்விழி கலந்து கொண்டனர்.