ADDED : பிப் 14, 2024 02:10 AM

சென்னை:தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு மாற்றப்பட்ட அரி கொம்பன் யானை, நலமாக உள்ளதாக தமிழக வனத்துறை விளக்கம் அளித்து உள்ளது.
கேரள வனப்பகுதியில் இருந்த, 35 வயதான ஆண் யானை, அங்குள்ள தேயிலை தோட்டங்களில் நடமாடுவதால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
அரிசி இருக்கும் இடத்தை தேடி வருவதால், இதற்கு அங்குள்ள மக்கள், அரி கொம்பன் என, பெயரிட்டனர். கடந்த ஆண்டு ஜூன், 6ல், தமிழகத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் குட்டியார் பகுதியில், அந்த யானை விடப்பட்டது.
ஜி.பி.எஸ்., கருவி அதன் கழுத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், யானை எங்கு செல்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரி கொம்பன் யானை இறந்து விட்டதாக, கேரளாவில் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழக வனத்துறையின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஜூனில் இங்கு விடப்பட்டதில் இருந்து அரி கொம்பன் யானையின் நடமாட்டம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
நெல் பயிர்களை நோக்கி செல்லும், அதன் பழக்கம் சற்று மாறுபட்டுள்ளது. இங்கு அப்பர் கோதையாறு அணை பகுதியில், நல்ல முறையில் சுற்றி வருகிறது. தினமும், 3 கி.மீ., தொலைவுக்கு பயணிக்கிறது.
வேறு சில யானை கூட்டங்கள் நடமாடும் இடங்களுக்கு, மிக அருகிலேயே அரி கொம்பன் சுற்றி வருவது தெரிகிறது. ஜன., 28ல், முத்துகுழிவயல் என்ற இடத்தில், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் இந்த யானையை நேரில் பார்த்துள்ளனர்.
அப்போது, அரி கொம்பன் யானை நல்ல உடல் நலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

