ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 17 பேரின் 'குண்டாஸ்' ரத்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 17 பேரின் 'குண்டாஸ்' ரத்து
ADDED : ஆக 07, 2025 01:00 AM
சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில், 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ல், சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களில் ரவுடி நாகேந்திரன் உட்பட, 27 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கடந்தாண்டு செப்டம்பரில், மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்ட அஞ்சலை, அஸ்வத்தாமன், அருள் உட்பட, 17 பேரின் உறவினர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, 1,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் 14,000 பக்கங்களுக்கு மேலான ஆவணங்கள் வழங்கப்பட்ட அன்றைய தினமே, அவற்றை ஆய்வு செய்து, மாநகர போலீஸ் கமிஷனரால், 'குண்டாஸ்' உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக, குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எந்த மனிதராலும், அவ்வாறு செய்வது இயலாத காரியம். எனவே, 17 பேருக்கு எதிராக, கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அதேநேரம், இவர்களின் குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தால் மட்டுமே, இவர்களுக்கு ஜாமின் வழங்கி விடக் கூடாது. வழக்கின் தீவிரத்தை முழுமையாக கருத்தில் கொண்டே, ஜாமின் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.