வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை அழைத்து வர ஏற்பாடு
வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை அழைத்து வர ஏற்பாடு
ADDED : பிப் 21, 2025 12:56 AM
சென்னை:வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை, விமானத்தில் அழைத்து வர, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கடந்த 16, 17, 18ம் தேதிகளில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், தென் மாநில அணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள், ஒரு மேலாளர் என, ஏழு பேர் பங்கேற்றனர்.
அவர்கள், நேற்று முன்தினம் இரவு 1:30 மணிக்கு, வாரணாசியில் இருந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வர முன்பதிவு செய்திருந்தனர். தற்போது, மகா கும்பமேளா நடப்பதால், அந்த ரயிலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இதனால், அவர்களால் ரயிலில் ஏற முடியவில்லை.
ரயில் புறப்பட்ட பின், வாரணாசியிலேயே தவித்த அவர்கள், தங்களை அழைத்துச் செல்ல, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும், அவர்களை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி, துணை முதல்வர் உதயநிதி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறியதாவது:
வாரணாசியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர், ரயிலில் ஏற முடியாமல் தவித்த தகவல் அறிந்ததும், உடனடியாக அவர்களிடம் பேசி ஆறுதல் கூறினோம்.
இதையடுத்து, நேற்று மதியம் 1:30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூருக்கும், இரவு 7:30 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கும் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.