சி.எம்.டி.ஏ., அதிகாரிக்கு எதிரான கைது உத்தரவு வாபஸ்
சி.எம்.டி.ஏ., அதிகாரிக்கு எதிரான கைது உத்தரவு வாபஸ்
ADDED : ஜூலை 19, 2025 12:14 AM
சென்னை:சென்னை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, 2019ல் சிவில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தன் தரப்பு கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக, சி.எம்.டி.ஏ., என்ற, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்கள் தேவைப்படுவதாகவும், அந்த ஆவணங்கள் இல்லாததால், எதிர்தரப்பினர் தேவையில்லாமல் வழக்கை பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்மன், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தரப்பில் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரை கைது செய்து, நேற்று ஆஜர்படுத்தும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''எந்த உத்தரவையும் வேண்டுமென்று மீறவில்லை. கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
''நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை,'' என்று தெரிவித்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதி, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக உத்தரவிட்டார்.