அறுபடை வீடு 3ம் கட்ட பயணம் திருச்செந்துாரில் துவக்கம்
அறுபடை வீடு 3ம் கட்ட பயணம் திருச்செந்துாரில் துவக்கம்
ADDED : மார் 17, 2024 04:00 AM
சென்னை : அறுபடை வீடு மூன்றாம் கட்ட ஆன்மிக பயணம் மே, 29ம் தேதி திருச்செந்துாரில் துவங்குகிறது என, அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிக பயணம் ஏற்பாடு செய்தும் நடத்தி வருகிறது. மேலும், ராமேஸ்வரம்- - காசி ஆன்மிக பயணமாக கடந்த ஆண்டு, 200 பக்தர்களும், நடப்பாண்டில், 300 பக்தர்களும் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள் கட்டணமில்லா ஆன்மிக பயணமாக ஆண்டிற்கு, 1,000 பேர் அழைத்து சென்று தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இதுவரை இரண்டு கட்டமாக சென்னை மற்றும் பழனியில் இருந்து தலா, 200 பக்தர்கள் வீதம் அழைத்து செல்லப்பட்டனர். மூன்றாம் கட்டமாக மே, 29ம் தேதி திருச்செந்துாரிலிருந்து புறப்படப்பட உள்ளது.
இந்த ஆன்மிக பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன், பயணப்பை தொகுப்பும் வழங்கப்படுகிறது.

