தமிழக அரசின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வோம்: அரவிந்த் பனகாரியா உறுதி
தமிழக அரசின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வோம்: அரவிந்த் பனகாரியா உறுதி
ADDED : நவ 19, 2024 03:36 AM
சென்னை: ''தமிழக அரசின் கோரிக்கைகளை கவனத்தில் வைத்து, மாநிலங்களுக்கான நிதி பகிர்வு தொடர்பாக, 16வது நிதிக்குழு முடிவெடுக்கும்,'' என, அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார். அவரது பேட்டி:
சென்னையில் நடந்த நிதிக்குழு உடனான ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு பரிந்துரைகளை, முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.
தமிழகத்திற்கு ஏன் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பதற்கு, விரிவான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு அளித்த காட்சி விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது.
தற்போது மத்திய அரசின் வரி வருவாயில், மாநிலங்களுக்கு 41 சதவீதம் வழங்கப்படுகிறது. இதை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல மாநிலங்களும், இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, அவற்றை எதிர்கொள்ள உரிய நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பேரிடரை எதிர்கொள்ள அதிகம் செலவிடும் மாநிலங்களுக்கு, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி வழங்குவது தொடர்பாக மாற்று வழிகளை நிதிக்குழு ஆராயும்.
வளர்ச்சியை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்குமான நிதி பகிர்வு இடைவெளி, 3:1 லிருந்து 6:1 ஆக அதிகரித்து உள்ளது.
இதுவரை, 10 மாநிலங்களில் ஆலோசனை நடத்தி உள்ளோம். இன்னும், 18 மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. தமிழகம் மட்டுமே, தனிநபர் வருமானம், வாங்கும் திறனில் மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி பகிர்வு அளிப்பதை, தமிழக அரசு ஏற்கவில்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 8 சதவீத பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது.
அதே அளவிலான நிதி பகிர்வை தமிழகம் எதிர்பார்க்கிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை கவனத்தில் வைத்து, நிதிக்குழு முடிவுகளை எடுக்கும்.
அனைத்து மாநிலங்களின் பரிந்துரைகளையும் கேட்ட பிறகே முடிவெடுக்க முடியும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
நிதிக்குழு வலுவாக தன் பணிகளை மேற்கொண்டு, மாநிலங்களின் வளர்ச்சிக்கும், அதன் வாயிலாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
இவ்வாறு அரவிந்த் பனகாரியா கூறினார்.

