ADDED : செப் 18, 2024 10:20 PM
சென்னை:பிரதமர் மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்க, பிரதமர் அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால், மத்திய அரசு, 'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்டத்தில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தமிழக அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு வழங்கவில்லை.
இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என, அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பியதும், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி, நாளை பிரதமரை சந்தித்து பேச, முதல்வர் தரப்பில், பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. முதல்வரை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கினால், நாளை சந்திப்பு நிகழலாம். இல்லையேல், 25ம் தேதி சந்திக்க வாய்ப்புள்ளது என, தகவல் வெளியானது. பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதும், முதல்வர் டில்லி பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறினர்.