ம.தி.மு.க., கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்
ம.தி.மு.க., கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்
ADDED : ஜூலை 10, 2025 11:34 AM

சென்னை: ''மதிமுக தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என தமிழக பா.ஜ, முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க., கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம் பிடித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் செய்யும் படியும் வைகோ கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, அங்கிருந்த ம.தி.மு.க., தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதனால், பல ஊடக நண்பர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசியல் தலைவரான வைகோ, சிறிதும் பொறுப்பற்ற முறையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூறியிருப்பதும், ஊடகவியலாளர்கள் மதிமுக கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வைகோ, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நிச்சயம் நேரில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ம.தி.மு.க., கட்சியினர் மீது, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

