மாமல்லையில் காவலாளி மீது தாக்குதல் மம்தா கட்சி பிரமுகர் உட்பட மூவர் கைது
மாமல்லையில் காவலாளி மீது தாக்குதல் மம்தா கட்சி பிரமுகர் உட்பட மூவர் கைது
ADDED : அக் 23, 2024 12:42 AM

சென்னை:மாமல்லபுரத்தில், சுற்றுலா வாகனத்தை, 'பார்க்கிங்'கில் நிறுத்துமாறு கூறிய காவலாளியை, சரமாரியாக தாக்கிய திரிணமுல் காங்., மாநில பொதுச்செயலர் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் சிற்ப பகுதியில், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழும கைவினைப் பொருட்கள் வணிக வளாகம் மற்றும் சுற்றுலா வாகனம் நிறுத்துமிடம் உள்ளது.
இங்கு ஏழுமலை, 35, என்பவர் காவலாளியாக உள்ளார். கடந்த 20ம் தேதி மாலை 3:30 மணிக்கு, ஐந்து ரதங்கள் சிற்ப வளாகத்தை நோக்கி சென்ற காரை மறித்த ஏழுமலை, காரை, 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும்படி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அவருக்கும் காரில் வந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து, ஏழுமலை வைத்திருந்த பிளாஸ்டிக் குழாயை பறித்து, அவரை சரமாரியாக தாக்கினர்.
இந்த விவகாரம், சமூக வலைதளங்கள் வாயிலாக நேற்று முன்தினம் மாமல்லபுரம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
பின், முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபு இன்பதாஸ், 41, அவரது மனைவி கீர்த்தனா, 29, மறைமலை நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி ஷண்முகபிரியா, 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
பிரபு இன்பதாஸ், திரிணமுல் காங்கிரஸ்கட்சியின் தமிழக பொதுச்செயலராக உள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், குன்னுார் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

