திருமாவளவன் பேசும்போது 'மைக் கட்' ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி
திருமாவளவன் பேசும்போது 'மைக் கட்' ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி
ADDED : நவ 23, 2024 02:42 AM
சென்னை:வி.சி., தலைவர் திருமாவளவன் பேசும்போது, 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கோபம் அடைந்த நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட ஊழியரை தாக்க முயன்றனர்.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6ல் நடைபெற உள்ளது. ரயில்வேயில் உள்ள 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோட்ட தலைமை அலுவலக வளாகத்தில், டி.ஆர்.இ.யு., எனப்படும், தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில், வி.சி., தலைவர் திருமாவளவன் ஓட்டு சேகரித்தார்.
அவர் பேசுவதற்காக மேடைக்கு வந்த போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 'மைக் ஆப்' செய்யப்பட்டது. வி.சி., நிர்வாகிகள், மின் இணைப்பு வழங்கும் பணியில் இருந்த ஊழியரிடம் வாக்குவாதம் செய்தனர்.
கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட மதியம், 1:15 முதல் 2:15 மணி வரையான உணவு இடைவெளி நேரம் முடிந்தது, அதனால், துண்டிப்பு செய்ததாக கூறினார். ஆத்திரமடைந்த நிர்வாகிகள், அவரை தாக்க முயன்றனர். போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் மைக் இணைப்பு தரப்பட்டு திருமாவளவன் ஐந்து நிமிடம் பேசினார்.

