ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வ பணிகள்: முதல்வர் வேண்டுகோள்
ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வ பணிகள்: முதல்வர் வேண்டுகோள்
ADDED : பிப் 28, 2026 06:31 AM

சென்னை: 'என் பிறந்த நாளில் ஆடம்பரத்தை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:-
மார்ச் 1ம் தேதி, என் 73-வது பிறந்த நாளை ஒட்டி, ஆர்வம் மிகுதியால் கண்களை உறுத்தும் படாடோப விளம்பரங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். உற்சாகமும், வேகமும் எல்லை மீறி போக அனுமதிக்கக் கூடாது.
சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு, இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். கட்சி கொடிகளை புதுப்பிப்பது,- புதிய கொடிகளை ஏற்றி வைப்பது, படிப்பகங்களுக்கு பயனுள்ள புதிய நுால்களை வழங்குவது போன்றவை தான் அவசியமானவை. இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே பெரிதும் வரவேற்கிறேன்.
நம் நிலையும், நினைப்பும் வரும் சட்டசபை தேர்தலையே மையம் கொண்டதாக இருக்க வேண்டும்.
நாட்கள் இருக்கிறதே என்ன அவசரம் என எண்ணாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளை திட்டமிட்டு தொய்வின்றி தொடர வேண்டும். ஆடம்பரத்தை தவிர்த்து, ஆக்கப்பூர்வ பணிகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

