ADDED : ஏப் 04, 2025 09:11 PM

சென்னை:பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், இடைக்கால தடையை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, 'தி.மு.க., - எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய தொகுதி நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை' என, குற்றம் சாட்டினார். பழனிசாமியின் பேச்சு, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர் மீது தயாநிதி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்திருந்தது.
இம்மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாநிதி தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும், 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, பழனிசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கு விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்தார்.

