பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு தடை; நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு
பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு தடை; நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு
ADDED : ஏப் 28, 2025 05:45 AM

சென்னை: ''பா.ஜ., வளர்ச்சியை பொறுக்காத ஆளும் கட்சியினர், பா.ஜ., நிகழ்ச்சி நடத்த, அனுமதி மறுக்கின்றனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
சென்னை மெரினா கடற்கரையில், நடுக்குப்பம் மீன் மார்க்கெட் அருகே, நேற்று பிரதமர் மோடியின், 121வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப, அக்கட்சி மாநில பொதுச்செயலர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்காக மேடை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அமர 100 மீட்டருக்கு மேல் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை போலீசார், நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை எனக் கூறி, சாமியானா பந்தலை அகற்றும்படி கூறினர். அதற்கு கட்சியினர் மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸ் கெடுபிடி காரணமாக, பந்தல் மற்றும் மேடையை அகற்றினர். அவசரமாக, ராயப்பேட்டையில் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே உள்ள, திருமண மண்டபத்திற்கு நிகழ்ச்சியை மாற்றினர்.
நிகழ்ச்சிக்கு வந்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார்நாகேந்திரனுக்கு, சிறிய படகு மற்றும் மீன் வலை பரிசாக அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் பொருத்தப்பட்ட, எல்.இ.டி., திரையை திருமண மண்டபத்திற்கு எடுத்து வர தாமதம் ஏற்பட்டது.
எனவே, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தங்கள் மொபைல் போனில், பிரதமரின் பேச்சை கவனித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, எல்.இ.டி., திரையில் பிரதமர் பேச்சு ஒளிபரப்பப்பட்டதும், அதை பார்த்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், உலகையே உலுக்கியுள்ளது. 'இதற்கு தகுந்த பதிலடி தருவோம்' என, பிரதமர் மோடி 121வது மனதின் குரலில் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டிய சம்பவம். 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பா.ஜ.,வினர், பொதுமக்களுக்கு திரையிட்டு காட்டி வருகிறோம்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் நடந்த, 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
தற்போது அதை தடுத்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி தொகுதி என்பதால், அனுமதி மறுத்ததாக போலீசார் சிலர் கூறுகின்றனர். அடக்குமுறை வாயிலாக, எதையும் செயல்படுத்த நினைப்பது தவறு.
ஆட்சியில் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்ற நினைப்பில் இதையெல்லாம் செய்கின்றனர். பா.ஜ., வளர்ச்சியை பொறுக்காமல் இப்படிபட்ட காரியங்களை செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.