வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் கோர்ட் உத்தரவுக்கு தடை
வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் கோர்ட் உத்தரவுக்கு தடை
ADDED : பிப் 16, 2024 01:09 AM
சென்னை:த்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயித்து, பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 30ல், பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கையில், சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப் பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'கிரெடாய்' அமைப்பு மற்றும் இரு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. தன்னிச்சையாக வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும் மனுக்களில் கூறப்பட்டன.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைக்கும் போது, நிபுணர் குழு அறிக்கை பெற வேண்டும்; பொது மக்களிடம் இருந்து ஆட்சேபனைகளை பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. எனவே, சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. விதிகளின்படி, உரிய நடைமுறையை பின்பற்றி, வழிகாட்டி மதிப்பை மாற்றிக் கொள்ளலாம்' என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, கிரெடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.