'பேலன்ஸ்' குறைந்தால் அபராதம் விதிக்கும் வங்கிகள்: ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு
'பேலன்ஸ்' குறைந்தால் அபராதம் விதிக்கும் வங்கிகள்: ஊழியர் சம்மேளனம் குற்றச்சாட்டு
ADDED : பிப் 16, 2025 03:44 AM
மதுரை, பிப். 16 -
வங்கிக்கணக்கில் 'பேலன்ஸ்' தொகை குறையும் போது வங்கிகள் அபராதம் விதிப்பதால் இளையோர்களின் சேமிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன மத்திய குழு உறுப்பினர் குமரன் குற்றம் சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
பொதுமக்களின் வங்கிக்கணக்கை பராமரிப்பதற்கு வங்கிகள் ஆண்டு சேவை கட்டணமாக தனியாக வசூலிக்கின்றன. நகர்ப்புற வங்கிகளில் சேமிப்புக் கணக்கு துவங்கினால் குறைந்தபட்சம் ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும், செக் பரிவர்த்தனை உள்ள 'கரண்ட்' வங்கி கட்டணத்திற்கு ரூ.2500 வீதம் இருப்பு இருக்க வேண்டும் என வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன.
தனிநபர் சேமிப்புக் கணக்கில் ரூ.1000க்கு பதிலாக ரூ.900 இருந்தால் கூட இருப்புக் குறைவை காரணம் காட்டி வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. இந்த முறையில் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ரூ.35 ஆயிரம் கோடியை பொது மக்களிடம் இருந்து அபராத கட்டணமாக வசூலித்துள்ளது. வங்கிகள் அபராத கட்டணம் விதித்தால் இளையோரிடம் சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வரமுடியாது. இளைஞர்களிடையே சேமிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. தேவையற்ற அபராதத் தொகை விதிப்பதால் பலர் வங்கிக் கணக்கை விட்டு வெளியேறுகின்றனர்.
தனிநபர்கள் ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்துவதற்காக வங்கிகள் ஆண்டு பராமரிப்பு சேவை கட்டணமாக ரூ.300 முதல் ரூ.500 வரை தனியாக வசூலிக்கின்றன. அப்படி இருக்கும் போது மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்., மையத்தில் இருந்து பணம் எடுத்தால் அபராதம் விதிப்பது அநியாயம்.
'எங்கள் பணத்தை எடுப்பதற்கு நீங்கள் ஏன் அபராதம் விதிக்கிறீர்கள்' என வாடிக்கையாளர்கள் வங்கியாளர்களிடம் வாக்குவாதம் செய்வது தொடர்கிறது.
சேவை கட்டணம் வாங்கிய பின் எத்தனை முறை பணம் எடுத்தால் வங்கிகளுக்கு என்ன வந்தது. வாடிக்கையாளர்களின் பணம் அக்கவுண்டில் இருக்கிறது என்பதற்காக வங்கிகள் இஷ்டம் போல் அபராதம் வசூலிப்பதை ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்த வேண்டும்.
வாரத்தில் 5 நாட்கள் போதும்
மத்திய அரசால்அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பும் வாரத்தில் 5 நாட்கள் வேலைத் திட்டம் என்ற இருதரப்பு ஒப்பந்தத்தை 2024 மார்ச்சில் நிறைவேற்றியது.
மத்திய அரசுக்கும் ஒப்பந்தத்தை அனுப்பி ஒப்புதலை எதிர்பார்ப்பதாக அனைத்து வங்கிகள் சங்கம் தெரிவித்தது. தேர்தலை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்ட இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
சேவை கட்டணம் வாங்கிய பின் எத்தனை முறை பணம் எடுத்தால் வங்கிகளுக்கு என்ன வந்தது. வாடிக்கையாளர்களின் பணம் அக்கவுண்டில் இருக்கிறது என்பதற்காக வங்கிகள் இஷ்டம் போல் அபராதம் வசூலிப்பதை ரிசர்வ் வங்கி ஒழுங்கு படுத்த வேண்டும்.