ADDED : ஜன 02, 2024 10:23 PM
சென்னை:புதிய கல்வி கொள்கையின்படி, நாடு முழுதும் பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பு நடத்தும்படியும், அதற்கு இணையானதாக கருதப்படும் எம்.பில்., படிப்பை நடத்த வேண்டாம் என்றும், யு.ஜி.சி., சார்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த கல்வி ஆண்டு முதல், எம்.பில்., படிப்புக்கான தடை அமலுக்கு வந்த நிலையில், சில நிகர்நிலை பல்கலைகள் மற்றும் சில தன்னாட்சி கல்லுாரிகளில், எம்.பில்., படிப்புக்கு சேர்க்கை நடப்பதாக, யு.ஜி.சி.,க்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படாத எம்.பில்., படிப்புகளில், இனி மாணவர்களை சேர்க்க வேண்டாம் என, கடந்த வாரம் யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்தது. அதையடுத்து, 'எந்த கல்லுாரியும் எம்.பில்., படிப்புக்கு புதிய மாணவர்களை சேர்க்க வேண்டாம்.
அவ்வாறு சேர்க்கும் கல்லுாரிகளுக்கு, அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டாம்' என, உயர் கல்வித்துறை சார்பில், பல்கலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.