ADDED : ஜூன் 17, 2025 11:02 PM
அரியலுார்:''சென்னையில் விரைவில் பேட்டரி பஸ்கள் இயக்கப்பட உள்ளன,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
அரியலுாரில், பஸ் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
அரியலுார் மாவட்டத்தில், இரண்டு புதிய வழித்தடத்திலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலும், 31 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அருகாமையில் உள்ள நகரங்கள், மருத்துவமனைகள், கல்லுாரிகள், பள்ளிகளுக்கு சென்றுவரும் வகையில் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இயங்கி வந்த பஸ்கள், 25 கி.மீ துாரத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த இத்திட்டமானது, பின், கட்டண உயர்வு உட்பட, பல காரணங்களால் தொய்வடைந்தது. மீண்டும் இத்திட்டமானது, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாயிலாக, புத்துயிர் பெற்று செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
சென்னை மாநகரில் இன்னும், 10 நாட்களில் பேட்டரி பஸ்கள் சேவை துவக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.