அதெல்லாம் இருக்கட்டும்... ஆயிரம் ரூபாய் என்னாச்சு? வேட்பாளர் ராஜாவிடம் பெண்கள் கேள்வி
அதெல்லாம் இருக்கட்டும்... ஆயிரம் ரூபாய் என்னாச்சு? வேட்பாளர் ராஜாவிடம் பெண்கள் கேள்வி
ADDED : ஏப் 03, 2024 06:13 AM

அன்னூர் : 'மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை' என எமநாயக்கன்பாளையத்தில் பெண்கள் ராஜாவிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
நீலகிரி எம்.பி., யும், தி.மு.க., வேட்பாளருமான ராஜா, அன்னூர் தெற்கு ஒன்றியம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை வரவிருந்தது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாமல் இருக்க, தொழிற்பேட்டை வராமல் நான்தான் தடுத்து நிறுத்தினேன் என்றார்.
அப்போது கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெண்கள், பிரசார ஜீப்பை சூழ்ந்து கொண்டு, 'அதெல்லாம் இருக்கட்டும்...எங்களுக்கு மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வரவில்லை, எங்கள் வீதியில் வசதியான சிலர், மாதம் ஆயிரம் ரூபாய் வாங்குகின்றனர்.
ஆனால் ஆறு மாதமாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்தும், எங்களுக்கு கிடைக்கவில்லை' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத ராஜா, ''பார்க்கிறேன், பார்க்கிறேன்,'' என்று கூறியபடி அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

