உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மசோதா தாக்கல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மசோதா தாக்கல்
ADDED : ஏப் 17, 2025 01:06 AM
சென்னை:தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமன முறையில் உறுப்பினராக்குவதற்கான சட்ட முன்வடிவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். “இது சட்டமாக்கப்பட்டதும், 13,988 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவர்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கு வழிவகை செய்யும் இரண்டு சட்ட மசோதாக்களை, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பெருமை
ஆட்சி பொறுப்புக்கு தி.மு.க., வருவதற்கு முன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு, 667 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதியாண்டில், 1,432 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் மட்டுமல்ல, உரிமை அடிப்படையில், திட்டங்களை தீட்டி வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலே அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மாநிலம், தமிழகம் தான்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன கருவிகள் வழங்கும் திட்டம், 125 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைப்பது போல, மாற்றுத்திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தேன். உள்ளாட்சி அமைப்புகளில், அவர்களின் உரிமையை நிலைநாட்ட, தி.மு.க., அரசு உறுதியுடன் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கக் கூடிய வகையில், சட்ட முன்வடிவடிவுகளை முன்மொழிந்ததை, வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
இந்த சட்ட முன்வடிவின்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக நியமன முறையில் உறுப்பினராக நியமிக்கப்படுவர்.
இதன் வழியாக, அவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெற, இந்த சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும்.
இதை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994; தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் - 1998 போன்றவற்றில் திருத்தங்கள் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றால் மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமின்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வர்.
நியமனம்
ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதும், அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களாக மாற்றுவதும் தான், திராவிட இயக்கத்தின் நோக்கம். அந்த அடிப்படையை கொண்டது தான் இந்த சட்டம். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், நகர்ப்புற உள்ளாட்சிகள் - 650; கிராம பஞ்சாயத்துகள் - 12,913; ஊராட்சி ஒன்றியங்கள் - 388; மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர். அவர்களின் குரல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.