ADDED : பிப் 16, 2026 01:26 AM
சென்னை: 'தமிழகத்தில், 29 வனக்கோட்டங்களில், 1,000 இடங்களில், நிலப்பரப்பில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நேற்று நிறைவடைந்தது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆண்டு தோறும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் .
அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, கடந்த டிசம்பர் மாதத்திலேயே துவக்கப்பட்டது. டிச., 27, 28ம் தேதிகளில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
அதேபோல, இரவு நேர பறவைகள் கணக்கெடுப்பு; ஊன் உண்ணி பறவைகள் கணக்கெடுப்பு, ஜன., 31 முதல் பிப்.,1 வரை நடந்தன. அடுத்து, நிலப்பரப்பில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு, நேற்று முன்தினம் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு, நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நேற்று நிறைவடைந்தது. மாநிலம் முழுதும், 29 வனக்கோட்டங்களில், 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கணக்கெடுப்பு நடந்தது.
இதில், 2 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டம், வனக்கோட்டம் வாரியாக, கணக்கெடுப்பு விபரங்கள் திரட்டப்பட்டு, ஒருங்கிணைந்த புள்ளிவிபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

