ADDED : மார் 04, 2026 06:29 AM

சென்னை : தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு, 14 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில், ஜன., 5ம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த காகங்களின் உடலை ஆய்வு செய்த மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்ததை உறுதி செய்தது. மேலும், தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே, சென்னையை தொடர்ந்து, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்திலும் காகங்கள் உயிரிழந்து வருகின்றன.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரம், காகங்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருவதால், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கையால் தொட்டு அப்புறப்படுத்தக் கூடாது. அதேபோல், காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

