'பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு அமித் ஷாவுக்கு சந்தோஷமே'
'பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு அமித் ஷாவுக்கு சந்தோஷமே'
ADDED : ஆக 25, 2025 03:59 AM
சென்னை : திருநெல்வேலியில், தமிழக பா.ஜ., சார்பில் பூத் கமிட்டி மாநாடு, கடந்த 22ல் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் பங்கேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்த மாநாட்டில் பங்கேற்றோர் அமருவதற்காக, 2-0 ஆயிரத்துக்கும் கூடுதலான சேர்கள், மாநாட்டு பந்தலில் போடப்பட்டிருந்தன.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாததால், மாநாட்டில் பல இடங்களில் சேர்கள் காலியாகக் கிடந்தன. இதனால், கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா அப்செட் ஆனதாக, செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, நம்மை தொடர்பு கொண்ட, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், ''திருநெல்வேலியில், தமிழக பா.ஜ., சார்பில் பிரமாண்டமாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட்டது.
'' மாநாட்டில் 40,000 பேர் வரை பங்கேற்றனர். ஆனால், மாநாட்டில் 17,000 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், அதனால், மத்திய அமைச்சர் அமித் ஷா அப்செட் ஆனதாகவும் வெளியான தகவல் தவறு.
''திருநெல்வேலியைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல இடங்களிலும், இதே போன்ற பூத் கமிட்டி மாநாடுகள், தமிழக பா.ஜ., சார்பில் நடத்தப்படவிருக்கிறது. கடைசியாக, சென்னையில் நடக்கும் பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டில் 8 லட்சம் பேர் பங்கேற்பர்.
''இந்த தகவலை, திருநெல்வேலி பெருமாள்புரத்தில் இருக்கும் என்னுடைய வீட்டுக்கு வந்த அமித் ஷாவிடம் சொன்னதும், சந்தோஷமானார். அதற்காக வாழ்த்தினார்.
'திருநெல்வேலி பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டுக்குப் பின், தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்' என்று சொல்லிவிட்டு, அதே மகிழ்ச்சியுடன் அமித் ஷா டில்லி திரும்பினார்,'' என்றார்.