ADDED : நவ 14, 2024 05:43 AM
சென்னை: 'மே 17 அமைப்பின் தலைவர், திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் புகார் அளித்தார்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த நவ., 6ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் குறித்து, திருமுருகன் காந்தி பேசினார். காஷ்மீரின் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களை, 'மக்கள் உரிமை போராளிகள்' என்றும், காஷ்மீரின் பயங்கரவாத குழுக்களை, 'தேசிய இன விடுதலைப் போராளிகள்' என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீர் பயங்கரவாத குழுக்களை, பாகிஸ்தான் எப்படி அழைக்குமோ அப்படி அழைத்துள்ளார். மேலும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தால், மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், இந்திய ராணுவத்தின் 'அசோக சக்ரா' விருது பெற்ற, மிக உயர்ந்த மாவீரர் முகுந்த் வரதராஜனை, போர் குற்றவாளி என்றும் பேசி உள்ளார்.
இவரது பேச்சு, தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை நேரடியாக துாண்டுகிற விதத்திலும், அரசுக்கு எதிராக பகை மூட்டும் நோக்கத்தோடும் உள்ளது. இந்திய ராணுவத்திற்கு எதிரான மனநிலையை, மக்களிடையே விதைக்கும் நோக்கத்தோடு, திருமுருகன் காந்தி செயல்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே இந்திய தேசத்தை, 'பொறுக்கி தேசம்' எனக் கூறியிருந்தார்.
அது குறித்து, அவர் மீது புகார் அளித்திருந்தேன். அப்போதே தமிழகப் போலீசார், அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற நபர்களின், தேசத்திற்கு எதிரான தொடர் குற்ற செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும். எனவே, இனியும் தாமதிக்காமல், அவர் மீது பாரதிய நியாய சட்டம், பிரிவு 152 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

