அக்., 12ல் பிரசார யாத்திரை துவக்க விழா கேட்ட இடம் கிடைக்காததால் பா.ஜ., புலம்பல்
அக்., 12ல் பிரசார யாத்திரை துவக்க விழா கேட்ட இடம் கிடைக்காததால் பா.ஜ., புலம்பல்
ADDED : அக் 08, 2025 06:50 AM

மதுரை: மதுரையில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் தேர்தல் பிரசார யாத்திரை துவக்க விழாவிற்கு, அக்கட்சியினர் கேட்ட 5 இடங்களை ஒதுக்காமல், வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, கட்சியினரை புலம்ப வைத்துள்ளது.
தமிழக பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 2026ல் நடக்க உள்ள தேர்தலை சந்திக்க உள்ளது.
அ.தி.மு.க., பிரசாரத்தை துவக்கியது போல, பா.ஜ.,வும் விரைவில் மாநில அளவில் தொகுதிவாரியாக பிரசார யாத்திரை நடத்த, கட்சியின் மாநில தலைவர் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதை, வரும் அக்., 12 மாலை 4:00 மணிக்கு மதுரையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவைக் கொண்டு துவக்கி வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதன்பின் சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்திய சென்னை, பெரம்பலுார் என தொகுதி வாரியாக யாத்திரை, பொதுக் கூட்டம் நடத்த உள்ளனர். மதுரை துவக்க விழாவை நடத்துவது தொடர்பாக, உரிய அனுமதி பெற நகர தலைவர் மாரி சக்ரவர்த்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
விண்ணப்பத்தில் பழங்காநத்தம் ரவுண்டானா, மேலமாசி வீதியில் டி.எம்.கோர்ட், முனிச்சாலை சந்திப்பு, சிம்மக்கல் ஆறுமுச்சந்தி, கே.புதுார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் யாத்திரைத் துவக்க நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அனுமதி கேட்டனர்.
ஆனால், கேட்ட இடங்களில் இருந்து ஒரு இடத்தை ஒதுக்காமல், அண்ணாநகர் பகுதியில் அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள இடத்தை, நிகழ்ச்சியை நடத்த ஒதுக்கியுள்ளனர். இந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதாக பா.ஜ.,வினர் புலம்புகின்றனர்.