நெல்லையில் காங்., மாநாடு பா.ஜ., நாகேந்திரன் விமர்சனம்
நெல்லையில் காங்., மாநாடு பா.ஜ., நாகேந்திரன் விமர்சனம்
ADDED : ஆக 29, 2025 04:14 AM
திருநெல்வேலி: ''முதல்வர் ஸ்டாலின், பீஹார் சென்றது வருத்தம் அளிக்கிறது. அங்கு வாக்காளர் பட்டியல் சர்ச்சையில் நடந்தது என்ன, என தனது உளவுத்துறை வாயிலாக விசாரித்த பிறகு, முதல்வர் சென்று இருக்கலாம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
திருநெல்வேலியில், வரும் செப்., 7ல் காங்கிரஸ் நடத்தும் மாநாடு, அந்த கட்சியை, இன்னும் நான்கு ஆண்டுகள் உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.
திருவண்ணாமலை, திருச்செந்துார் போன்ற பெரிய கோவில்களை நிர்வகிக்க, அறநிலையத்துறைக்கு பதில், தேவஸ்தானம் போர்டு அமைக்கலாம் என்ற, சென்னை உயர் நீதிமன்ற கருத்தை வரவேற்கிறேன். ஹிந்து அறநிலையத்துறை கூடாது என்பது தான் பா.ஜ., நிலைப்பாடு. வரும் 2026 தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வரானதும், அது நிச்சயமாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

