ஆசிரியர் தினத்தில் தேர்தல் வாக்குறுதி எண்-181 ஞாபகம் வருகிறதா; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
ஆசிரியர் தினத்தில் தேர்தல் வாக்குறுதி எண்-181 ஞாபகம் வருகிறதா; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : செப் 05, 2025 05:41 PM

சென்னை: ஆசிரியர் தினத்தில் தேர்தல் வாக்குறுதி எண்-181 ஞாபகம் வருகிறதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்து விட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் - 181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணை கொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.