ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜ., இன்று ஆர்ப்பாட்டம்
ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜ., இன்று ஆர்ப்பாட்டம்
UPDATED : மே 05, 2025 05:02 AM
ADDED : மே 05, 2025 04:27 AM

சென்னை: 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த ஏப்., 22ம் தேதி சுற்றுலா சென்ற மக்களை, மதத்தின் பெயரால் படுகொலை செய்த கொடூரம், உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.
இந்தியாவிற்குள் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்கு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகளே காரணம் எனவும், ஒரு அசாதாரண சூழ்நிலையில், நம் நாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தான், அவர்கள் இங்கு குடியேறியுள்ளனர் என்ற சந்தேகமும் தலைதுாக்கி உள்ளது.
தி.மு.க., அரசை விமர்சனம் செய்தால் கைது, பொய் வழக்கு; பா.ஜ.,வினர் உட்பட எதிர்க்கட்சியினர் மீது காவல் துறையை ஏவி அச்சுறுத்தல் என, சர்வாதிகார போக்கை கையாளும் தி.மு.க., ஆட்சியில், தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர்.
தி.மு.க., அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதில், தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும்.
ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தை காக்க, தேச பக்தர்கள் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.