ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை விஜய் கண்டிக்காதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை விஜய் கண்டிக்காதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
UPDATED : மார் 18, 2026 04:24 PM
ADDED : மார் 18, 2026 04:50 AM

மதுரை: ''நடிகர் ரஜினி குறித்து தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை பொது செயலர் ஆதவ்அர்ஜூனா விமர்சித்ததை அதன் தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன். அவரது பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா மன்னிப்புக் கேட்க வேண்டும்,'' என, மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். அதிகார பலத்தை வைத்து மக்களுக்கு பணத்தைக் கொடுத்து ஆசையைத் துாண்டி, தவறான தகவல்களைக் கூறி துணை முதல்வர் உதயநிதியை முதல்வராக்க துடிக்கின்றனர்.
உதாரணமாக ஐந்து ஆண்டுக்கு முன்பு பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டு வருவோம் என்றனர். தற்போது வரும் ஜூனில் கொண்டு வருவோம் என்கின்றனர். அதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. முன்பு ஓய்வூதியத் திட்டத்தில் எல்லாமே அரசே பணம் வழங்கியது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பணம் வழங்க வேண்டும் என்கின்றனர்.
தேர்தல் என்பதால் கோடைகாலம், பொங்கல் தொகை என வழங்கி மக்களை திசைதிருப்புகின்றனர். மக்கள் இதனை புரிந்து கொண்டுள்ளனர். அதிகார பலத்தை வைத்தே வெற்றி பெறுவது என்பது நடக்காது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1977 கொலைகள் நடந்துள்ளன. இதில் 361 பேர் குழந்தைகள். 38 பெண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா, கொக்கைன் நடமாட்டம் அதிகமுள்ளது. ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றால் போதைப் பொருள் புழக்கத்தை கணித்துக் கொள்ளலாம்.தே.ஜ., கூட்டணிக்கு த.வெ.க., வருவது, அமித்ஷாவை, நடிகை திரிஷா சந்தித்தார் என்பது குறித்தெல்லாம் எனக்கு தெரியாது.
தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும், இன்னமும் 15 நாட்கள் அவகாசம் உள்ளது. அதற்குள் சுமுகமாக பேசி முடிவெடுக்கப்படும். இத்தேர்தலில் மக்களின் மனபலமே வென்று மக்கள் ஆட்சி அமையும். பணபலம் வெல்லாது. விஜய்யை பா.ஜ., மிரட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது. இவ்வாறு கூறினார்.

