பா.ஜ.,வா; அ.தி.மு.க.,வா? இன்று முடிவெடுக்கிறார் வாசன்!
பா.ஜ.,வா; அ.தி.மு.க.,வா? இன்று முடிவெடுக்கிறார் வாசன்!
ADDED : பிப் 12, 2024 03:03 AM

கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., இருந்தது. இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் பிரிந்து விட்டதால், எந்த பக்கம் செல்வது என்பதை முடிவு செய்யாமல் த.மா.கா., இருந்து வருகிறது.
இதற்கிடையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர விரும்பிய வாசன், தானே காரை ஓட்டிச் சென்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டுக்கு போய் அவரை சந்தித்து சமாதானம் பேசினார். நான்கைந்து முறை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பா.ம.க., தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவிடமும் பேசினார். பழையபடி, பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாக, எல்லா முயற்சிகளையும் எடுத்தார்.
சமீபத்தில் டில்லியில் நடந்த மூத்த பத்திரிகையாளர் குடும்ப திருமண வரவேற்பு விழாவில், பா.ஜ., மேலிட தலைவர்கள் சிலர் பங்கேற்றனர். அவர்களை சந்தித்த வாசன், அ.தி.மு.க., கூட்டணியின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனாலும், பழனிசாமி திட்டவட்டமாக பா.ஜ., பக்கம் வர மறுத்து விட்டதால், தன் கட்சி நிலைப்பாட்டை இன்று முடிவு செய்கிறார் வாசன். அதற்காக செயற்குழு கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.
- நமது நிருபர் -

