ஈரானில் பணவீக்கத்தால் வெடித்தது போராட்டம்; வன்முறையாக மாறியதில் 3 பேர் பலி
ஈரானில் பணவீக்கத்தால் வெடித்தது போராட்டம்; வன்முறையாக மாறியதில் 3 பேர் பலி
ADDED : ஜன 01, 2026 09:17 PM

டெஹ்ரான்: தென்மேற்கு ஈரானில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான ஈரானில், 1979ல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படியே அங்கு ஆட்சி நடந்து வருகிறது. பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததும், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது. மூன்று ஆண்டுக்குப் பின், அங்கு மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஆரம்பத்தில் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் துவங்கிய போராட்டம், பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களாக மாறியுள்ளன. டெஹ்ரான் மையப் பகுதியில் துவங்கிய போராட்டங்கள், இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது. போராட்டக் காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
பல இடங்களில் போராட்டக் காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் வெடித்ததிலிருந்து ஏற்பட்ட முதல் உயிரிழப்புகள் இதுவாகும். டெஹ்ரானில் இருந்து தெற்கே 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் மோதல்கள், கல்வீச்சு காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

