ADDED : பிப் 01, 2026 03:22 AM

சென்னை: “தமிழகத்தை கைப்பற்ற பா.ஜ., எடுக்கும் எந்த முயற்சியும் பலன் அளிக்கப் போவதில்லை,” என, துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
வரும் சட்டசபை தேர்தல், தி.மு.க.,வுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் போராக இருக்கப் போகிறது. திராவிட கருத்தியல் என்பது பிரிவினையை துாண்டவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுதும் சமூக நீதிக்காக தி.மு.க., குரல் எழுப்பியது. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குடன் இணைந்து, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முன்னாள் முதல்வர் கருணாநிதி அமல்படுத்தினார்.
கடந்த 2007ல், தி.மு.க., அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. நாங்கள் எப்போது மாநில உரிமைகளை கோரினாலும், அதை தேசவிரோதம் என சித்தரிக்கின்றனர். மாநிலத்தின் கல்வி உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றால், பா.ஜ. கோபப்படுகிறது.
மாநில அரசுகளின், மக்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல், எதையும் திணிக்கலாம் என்று மத்திய அமைச்சர்களும் கவர்னர்களும் நினைக்கின்றனர். மாநில சுயாட்சியும் மொழி உரிமையும் தான் தி.மு.க.,வின் உயிர்.
வெளியுறவு, பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு, நாணயம் தவிர, மற்றவை அனைத்தும் மாநிலப் பட்டியலில் தான் இருக்க வேண்டும்.
தேசிய அளவில் திட்டங்களை வகுக்கும்போது, மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. இதனால், மத்திய அரசின் நிதிப்பகிர்வு திட்டங்கள், மாநிலங்களுக்கு பலன்களை விட பாரத்தையே தருகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்குவதில்லை. பா.ஜ., விரும்புவது ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை; ஒற்றுமையான இந்தியாவை அல்ல. மாநிலங்களை அழிக்க பா.ஜ., துடிக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது. அதன் மூலம் டில்லியிலிருந்து, 'ரிமோட் கன்ட்ரோல்' வாயிலாக மாநிலங்களை இயக்க நினைக்கிறது.
மாநிலங்களை நகராட்சியாக மாற்ற பார்க்கிறது. இதை எதிர்ப்பதால் தான் தி.மு.க.,வை அச்சுறுத்தலாக பா.ஜ., பார்க்கிறது. அதனால் தான், எங்களை அடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
தமிழகத்தை கைப்பற்ற பா.ஜ., எடுக்கும் எந்த முயற்சியும் பலன் அளிக்கப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

