ADDED : ஜூலை 19, 2025 03:35 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த ம.தி.மு.க., கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:
தி.மு.க.,வுக்கு 32 ஆண்டுகள் உழைத்தேன். கொலை பழிசுமத்தி துாக்கி எறியப்பட்டேன். நீண்ட காலமாகவே துரோகங்கள் என்னை தொடர்கின்றன. செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்றோர், பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, ம.தி.மு.க.,வை உடைத்து தி.மு.க.,வில் சேர்க்க முயன்றனர்.
பணத்தாசை காட்டி பொதுக்குழுவையும் கூட்டினர். ஆனால், 1,255 பொதுக்குழு உறுப்பினர்கள் என்னுடன் இருந்து கட்சியை காப்பாற்றினர்.
நம்மிடமிருந்த அவைத்தலைவர் ஒருவர், 350 கோடி ரூபாய் சொத்தை அபகரித்துக்கொண்டு துரோகம் செய்து விலகினார். இதுபோன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்த, நம் கட்சிக்காரர் ஒருவரை துரோகி என்று தான் சொல்ல வேண்டும். அந்த நபர், வெளிநாடுகளுக்கு ரகசியமாக சென்று கட்சியை முடக்கவும் சதி திட்டம் தீட்டினார்.
என் மகன் துரை, கட்சிக்குள் வரக்கூடாது என்றே கூறி வந்தேன். நிர்வாகிகள் தான் கட்டாயப்படுத்தி, ஓட்டெடுப்பு நடத்தினர். அதில் ஓட்டு போட்ட 106 பேரில், 104 பேர் வரவேற்றனர்.
இந்த சூழலில் தான், துரை கட்சிக்கு வந்தார். ஆனால், வாரிசு அரசியல் என்ற பழிச்சொல்லிற்கு நான் ஆளாகி நிற்கிறேன். குடும்ப அரசியலை விமர்சித்து வந்த வைகோ, இப்போது தவிப்பில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.