விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி
விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி
UPDATED : மே 01, 2024 02:52 PM
ADDED : மே 01, 2024 10:19 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். குடோனில் இருந்து வெடி மருந்தை வேனில் ஏற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிதறிக்கிடந்த உடல்களை அடையாளம் கண்டதில், கந்தசாமி (47), துரை (25), குருசாமி (60) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குவாரி உரிமையாளர்களான சேதுராமன், ஸ்ரீராம் ஆகியோர் போலீசில் சரணடைந்தனர். குவாரியை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உழைப்பாளர்கள் தினத்தில் விபத்து நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1000 கிலோ வெடிப்பொருள்
விபத்து நடந்த நிலையில், கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், வெடிவிபத்து நடந்த இடத்திற்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் நின்றிருந்த மற்றொரு வாகனத்தில் சுமார் 1000 கிலோ வெடிப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முதல்வர் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தனியார் வெடிப்பொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.