கோரிக்கைகள் குறித்து பேச வாங்க யூனியன்களுக்கு வாரியம் அழைப்பு
கோரிக்கைகள் குறித்து பேச வாங்க யூனியன்களுக்கு வாரியம் அழைப்பு
ADDED : ஜன 28, 2025 10:00 PM
சென்னை:கோரிக்கைகள் குறித்து, வரும் 1ம் தேதி முதல் பேச்சு நடத்த, 18 தொழிற்சங்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில், 60,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. எனவே, காலியிடங்களை நிரப்புவது, 'கேங்மேன்' தேர்வில் வெற்றி பெற்று விடுபட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது, புதிய ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இவற்றை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த மாதம், 7, 8ல் நடக்கும் மாநில ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து, தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக, மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல், மற்ற சங்கங்களும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த வருமாறு, தொழிற்சங்கங்களுக்கு மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வரும் 1ம் தேதி ஆறு, 15ம் தேதி ஆறு, மார்ச் 1ம் தேதி ஆறு என, மொத்தம், 18 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தப்பட உள்ளது
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போராட்டம் நடத்த இருப்பதற்காக, சங்கங்களை பேச்சுக்கு அழைக்கவில்லை; ஒவ்வொரு சங்கத்தினரும், மின் வாரிய தலைவரை சந்தித்து, கோரிக்கைகள் குறித்து பேச விரும்பினர்; அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஒரு சங்கத்தில் இருந்து மூன்று பேர் மட்டும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.