பொய் பிரசாரத்தை நிறுத்துங்கள் பிராமணர் சங்கம் வேண்டுகோள்
பொய் பிரசாரத்தை நிறுத்துங்கள் பிராமணர் சங்கம் வேண்டுகோள்
ADDED : நவ 09, 2024 08:00 PM
சென்னை:நடிகை கஸ்துாரி, தெலுங்கு மக்களை தவறாக பேசியதாக வந்த செய்திக்கு வருத்தம் தெரிவித்தபிறகும்கூட, அவர் மீது தமிழக காவல்துறை, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததற்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகை கஸ்துாரி தான் ஒரு தமிழ் பிராமணராக இருந்தாலும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு தெலுங்கரை திருமணம் செய்து, குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். எனவே, அவர் தெலுங்கு மக்களை, கூட்டத்தில் அவதுாறாக பேச வேண்டிய அவசியம் இல்லை.
தான் பேசியதில் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து, இந்த சர்ச்சையை முடித்து வைத்துள்ளார்.
ஏதோ ஒரு அமைப்பு, அவர் மீது சென்னையில் அளித்த புகாரின்படி, தமிழக காவல்துறை பழிவாங்கும் நோக்கத்துடன், பயமுறுத்தும் பாணியில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது தவறு; அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
பிராமண சமூகம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறது. பிராமண எதிர்ப்பு மற்றும் பொய் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.