'மற்ற சமூகத்தினரை போல பிராமணர்களையும் பாதுகாக்கணும்'
'மற்ற சமூகத்தினரை போல பிராமணர்களையும் பாதுகாக்கணும்'
ADDED : நவ 04, 2024 02:46 AM

சென்னை: ''எந்த சமூகத்தை இழிவாகப் பேசினாலும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய வேண்டும்,'' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.
பிராமண சமூகத்தின் மீதான, தொடர் அவதுாறு பிரசாரத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், நேற்று சென்னையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத் பேசியதாவது:
தமிழகத்தில் பிராமணர்களை, அன்னியர்கள், ஆரியர்கள் என, இழிவாகப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் அவர்களை இழிவுபடுத்துவது அதிகரித்து வருவதோடு, தமிழ் சமூகத்திலிருந்து அவர்களை பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது. சமீபத்தில் 'சண்டாளன்' என்ற பாடலை சீமான் பாடியதால், அந்த வார்த்தையை வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர்.
அதேபோல், பொதுமேடைகளிலும், பொது இடங்களிலும், பிராமணர்களை இழிவாக பேசுவோருக்கும், இந்த சட்டம் பொருந்த வேண்டும். பிற சமூதாயத்தை இழிவாகப் பேசினால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதுபோல், பிராமணர்களை மோசமாக விமர்சித்து பேசுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் முதல், அனைத்து பிராமண பெண்களையும் இழிவாகப் பேசுகின்றனர். முதல்வரின் வீட்டிலேயே சனாதனம் உள்ளது.
ஆனால், பிராமணர் களை இழிவாகப் பேசும், தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை, முதல்வர் கண்டிக்காதது வேதனையாக உள்ளது.
எந்த சமூகத்தை யார் இழிவாகப் பேசினாலும், அவர்கள் மீது பி.சி.ஆர்., சட்டம் பாய வேண்டும்.
தமிழக அரசு மற்ற சமூகத்தினரை பாதுகாப்பதுபோல், பிராமணர்களையும் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினர்.