திரிகோணமலையில் புத்தர் கோவில்: இந்தியா தலையிட ராமதாஸ் கோரிக்கை
திரிகோணமலையில் புத்தர் கோவில்: இந்தியா தலையிட ராமதாஸ் கோரிக்கை
ADDED : நவ 23, 2025 01:03 AM

சென்னை: 'இலங்கை திரிகோணமலையில், தமிழர்களின் எதிர்ப்பை மீறி புத்தர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட விவகாரத்தில், இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் திரிகோணமலை கடற்கரையோரம், கடந்த 16ம் தேதி, திடீரென ஒன்றுதிரண்ட புத்த மதத்தினர், புத்த விஹாரை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டி புத்தர் சிலையொன்றை நிறுவி உள்ளனர்.
இதற்கு தமிழ் மக்களும், தமிழ் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், காவல் துறையினர் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால், அடுத்த நாளே புத்தர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில், இலங்கை அரசின் இந்த அத்துமீறல் கடும் கண்டனத்திற்குரியது.
மத திணிப்பின் வாயிலாக, தமிழர்களின் வழிபாட்டு உரிமையை அழிக்க நினைக்கும் இலங்கை அரசை, இந்திய அரசும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டிக்க வேண்டும்.
இந்த பிரச்னையில் இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு, ஈழத்தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ, கூட்டாட்சி முறையிலான, தன்னுரிமை கொண்ட பிரதேசமாக மலர வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

