கட்டட அனுமதிக்கு இனி இன்ஜி., ஒப்புதல் வேண்டாம்: 100 மாதிரி வரைபடங்கள் வெளியிடுகிறது டி.டி.சி.பி.,
கட்டட அனுமதிக்கு இனி இன்ஜி., ஒப்புதல் வேண்டாம்: 100 மாதிரி வரைபடங்கள் வெளியிடுகிறது டி.டி.சி.பி.,
ADDED : பிப் 16, 2025 11:55 PM

சென்னை:சுயசான்று முறையில், கட்டட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக, 100 மாதிரி கட்டட வரைபடங்கள், விரைவில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
தமிழகத்தில், 2,500 சதுரடி வரையிலான பரப்பளவுள்ள மனைகளில், 3,500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்ட, சுயசான்று முறையில் அனுமதி பெறலாம்.
வரைபடம், நில உரிமை ஆவண பிரதிகள், அடையாள சான்றுகள் போன்றவற்றை, இணையதளத்தில் பதிவேற்றினால், உடனடியாக கட்டண விபரங்கள் தெரிவிக்கப்படும்.
கட்டணத்தை செலுத்தினால், உடனடியாக கட்டுமான அனுமதி கடிதம், ஆன்லைன் வாயிலாக கிடைத்துவிடும். அதிகாரிகள் பரிசீலனை மற்றும் முடிவுக்காக மக்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
இத்திட்டத்துக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை, 51,000 பேர் கட்டட அனுமதி பெற்றுஉள்ளனர்.
இதை மேம்படுத்த நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக புதிய வசதிகள் சேர்க்கப்பட உள்ளன.
இதுபற்றி, டி.டி.சி.பி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுயசான்று முறையில் கட்டட அனுமதி பெறும் பொது, மக்கள் சாதாரணமாக வரையப்பட்ட ஒரு வரைபடத்தை, முதலில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இதில், ஒப்புதல் கிடைத்த பிறகு, பதிவு செய்த பொறியாளர் வரைந்து கையெழுத்திட்ட வரைபடத்தை வாங்கி பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்த பணியை எளிதாக்கும் வகையில், 2,500 சதுரடி வரை, பல்வேறு அளவுள்ள மனைகளில் கட்டப்படும் கட்டடங்கள் தொடர்பாக, 100 வரைபடங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.
இந்த வரைபடங்களை சுயசான்று கட்டட அனுமதிக்கான இணையதளத்தில் வெளியிட இருக்கிறோம்.
புதிதாக வீடு கட்டுவோர், இந்த வரைபடங்களில், தங்கள் திட்டத்துக்கு ஏதுவான ஒரு வரைபடத்தை தேர்வு செய்யலாம்.
இவ்வாறு தேர்வு செய்த வரைபடத்தை, தங்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்து, கட்டட அனுமதி பெறலாம்.
விரைவில், இந்த வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனால், மக்கள் மிக விரைவாக கட்டட அனுமதி பெற வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

