சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!
சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!
UPDATED : அக் 11, 2024 06:00 AM
ADDED : அக் 11, 2024 05:56 AM

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையில் வசித்து வருவோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், பேருந்து, ரயில், விமான நிலையங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு பேருந்துகளில் மட்டும் 3.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து லட்சகணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பயணியரின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இரண்டு நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது நாளாக, நேற்றும் பயணியர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
![]() |
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையொட்டி தொடர் விடுமுறை வருவதால், இரண்டு நாட்களாக மக்கள் சொந்த ஊர்களுக்கு ஆர்வமாக புறப்பட்டு செல்கின்றனர். சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு, நேற்று முன்தினம் 700 சிறப்பு பேருந்துகளும், நேற்று 2,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப் பட்டன.
கடந்த இரண்டு நாட்களில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களோடு, பல்வேறு வழித்தடங்களில் 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் இருந்து ரயில்களில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்' என்றனர்.
![]() |
![]() |




