ADDED : ஜன 07, 2025 01:50 AM

இடுக்கி, :
கேரளாவில் சுற்றுலா பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்த 34 பேர், மாநில அரசு பஸ்சை வாடகைக்கு எடுத்து, தமிழகத்தின் தஞ்சாவூருக்கு சமீபத்தில் சுற்றுலா வந்தனர்.
பயணத்தை நிறைவு செய்தபின், மீண்டும் தங்கள் ஊருக்கு நேற்று திரும்பினர்.
அப்போது இடுக்கி மாவட்டம் புள்ளுபாரா பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேரளாவின் குட்டிகானம் - முண்டகாயம் இடையே செங்குத்தான சாலையில் சென்றபோது பஸ்சின் பிரேக் பழுதானதால், இந்த விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.