ADDED : அக் 19, 2025 04:08 AM

சென்னை: வெளியூர் விரைவு பஸ்கள் நெரிசலில் சிக்கியதால், முன்பதிவு செய்த பயணியர் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து அவதிப்பட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த 16ம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் ரயில்கள், பஸ்களிலும் அதிகளவில் புறப்பட்டு செல்கின்றனர். இதனால், மாநகரின் முக்கிய சாலைகளிலும் நேற்று முன்தினம் மாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஜி.எஸ்.டி., சாலையில் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து இயக்க வேண்டிய அரசு பஸ்கள் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலில் நின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வர வேண்டிய பஸ்கள் இரண்டு மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. இந்த பஸ்களில் முன்பதிவு செய்திருந்த பயணியர், மணி கணக்கில் காத்திருந்து அவதிப்பட்டனர்.
தாமதம் ஏன்
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டப்படி அரசு பஸ்கள் இயக்குகிறோம். இருப்பினும், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பஸ்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத பஸ்கள் தாமதம் இன்றி இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சரியான திட்டமிடல் இல்லை
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், பஸ் இயக்கத்திலும், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்திருந்த பயணியர், இரண்டு மணிநேரம் வரை காத்திருந்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்கள் தடையின்றி வெளியே செல்லவும், உள்ளே வர போதிய ஏற்பாடுகளும், நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.