முதல்வர் மருந்தகத்தில் மருந்து வாங்குங்கள் ரேஷன் ஊழியர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி
முதல்வர் மருந்தகத்தில் மருந்து வாங்குங்கள் ரேஷன் ஊழியர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி
ADDED : செப் 02, 2025 02:05 AM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகத்தில் மாதம் தோறும் மருந்துகளை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக, ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
தமிழக கூட்டுறவு துறை சார்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யும் வகையில், 'முதல்வர் மருந்தகம்' திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் மருந்தகத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் மாதத்திற்கு ஒரு முறை, முதல்வர் மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகள், சோப்பு, ஹார்லிக்ஸ், பிளேடு உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பில், மொபைல் போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதாக, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
'வழக்கமாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள், ரேஷன் பொருட்கள் வாங்கும் போது, கட்டாயமாக டீத்துாள், பெருங்காயம், சேமியா பாக்கெட், உப்பு ஆகிவற்றை தலையில் கட்டுவோம்.
இப்போது அது எங்களுக்கே திரும்பி வந்ததுபோல், முதல்வர் மருந்தகத்தின் மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருந்து பேக்கேஜ் என எங்கள் தலையில் கட்டுகின்றனர்' என, ரேஷன் கடை ஊழியர்கள் புலம்புகின்றனர்.