உரிய பதில் தராத அதிகாரிகள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உரிய பதில் தராத அதிகாரிகள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஆக 20, 2026 11:06 PM
சென்னை: ''கேள்வி நேரத்திற்கு உரிய பதில் தராத அதிகாரிகள் மீது, சபை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆஸ்டின் வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஆஸ்டின்: அரசு பொறுப்பேற்று, 103 நாட்களாகி விட்டது. எம்.எல்.ஏ.,க்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களை கொடுத்து உள்ளனர்.
அடுத்த எட்டு நாட்கள் மட்டுமே சட்டபை கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் ஒரு நாளுக்கு, 10 வீதம், 80 கேள்விகளை மட்டுமே விவாதத்திற்கு எடுக்க முடியும்.
கேள்விகளுக்கு பதில் அனுப்ப யார் காலதாமதம் செய்கின்றனர் என, 'நோட்டீஸ்' அனுப்பி, சபாநாயகர் விளக்கம் கேட்க வேண்டும்.
அதிகாரிகள் பதிலில் திருப்தி இல்லை என்றால், உரிமை மீறல் பிரச்னைக்கு கொடுக்கிறோம். அதை சபாநாயகர் உரிமை குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: விதிகளை சுட்டிக்காட்டி, 45 நாட்களில் துறை அதிகாரிகளிடம் இருந்து பதில்களை பெற, அமைச்சர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: துறைகளின் கொள்கை விளக்கக்குறிப்பு புத்தகத்தை, நள்ளிரவு, 1:00 மணிக்கும், அதிகாலை, 3:00 மணிக்கும் கொடுக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுத்தால், படித்து விட்டு பேசுவதற்கு வசதியாக இருக்கும்.
சபாநாயகர் பிரபாகர்: கேள்வி பதில் தாமதம் என, ஆஸ்டின் சொல்கிறார். நானும் பல கேள்விகளை ஆய்வு செய்து பார்த்தேன்.
'முந்தைய' என்று சொல்வதால், எதிர்க்கட்சிகள் பயந்து விட வேண்டாம். 2021ம் ஆண்டு கொடுத்த கேள்விக்கு, 2025ம் ஆண்டு வரை பதில் வராத நிகழ்வுகளும் உள்ளன.
இப்போதுள்ள அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால், தாமதமாக பதில்கள் வருகின்றன. இதுவரை, 50 கேள்விகளுக்கு பதில்கள் வந்து விட்டன.
எனவே, தினமும் ஐந்து கேள்விகளை வைக்கலாம் என, அலுவலகத்திற்கு குறிப்பு அனுப்பப்பட்டுஉள்ளது.
கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகங்களை ஐந்து நாட்களுக்கு முன்னர் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக கொடுக்க கூறியுள்ளேன்.
தி.மு.க., - எ.வ.வேலு: சபாநாயகர் நடுநாயகமாக செயல்படுபவர். நீங்கள் தான் எங்களுக்கு பாதுகாப்பு.
'முந்தைய' என்று சொன்னால், நாங்கள் பயந்து விட மாட்டோம். ஏனென்றால் நாங்கள் எல்லாம் மிசாவுக்கே பயப்படாதவர்கள்; இதற்கெல்லாம் பயந்து விடமாட்டோம்.
தி.மு.க., - ஓ.பன்னீர்செல்வம்: நான் அமைச்சராக இருந்த போது, தினமும், 20 கேள்விகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும் என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
